தமிழகத்தில் அதிகரித்து வரும் இளம் வயது கொரோனா மரணங்கள் - பீதியில் உறைந்துள்ள தமிழக மக்கள்

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் இளம் வயது கொரோனா உயிரிழப்புகள் மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

Update: 2020-07-07 06:34 GMT
பச்சிளம் குழந்தைகள், இளம் வயதினர், ஆரோக்கியமானவர்களை 
கொரோனா வைரஸ் தாக்கினால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்த கூற்றை பொய்யாக்கி உள்ளது இளம் வயது கொரோனா மரணங்கள். 

விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை, தஞ்சையில் 13 வயது சிறுவன், மதுரையில் 14 வயது சிறுமி ஆகியோரின் மரணங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 11 வயது முதல் 40 வயதுக்குள் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு சிலருக்கு பிற நோய் இருந்தாலும் கூட, பெரும்பாலனோர் கொரோனா தீவிரத்தால் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று இறந்த 61 பேரில் 14 வயது சிறுமியை தவிர 4 பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அறிக்கை சொல்கிறது. மதுரையில் ஜூன் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி இறந்த14 வயது சிறுமிக்கு ரத்த சோகையை தவிர வேறெந்த நோயும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஜூன் 30ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 4ஆம் தேதி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த 32 வயது இளைஞர், சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண், மதுரையைச் சேர்ந்த 37 வயது இளைஞர் ஆகியோர் இறந்திருப்பதாக நேற்று வெளியான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

தொற்று பயத்தை உள்ளே மறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கையில் கரைய நினைத்தாலும், இளம் வயதினர், ஆரோக்கியமானவர்கள் கொரோனா பாதிப்பால் இறப்பது மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்