சொந்த செலவில் தூர் வாரும் பணியை செய்யும் கிராம மக்கள் - கிராம மக்களுடன் கைகோர்த்த நாம் தமிழர் கட்சியினர்
பொதுப்பணித்துறை கைவிரித்த தூர் வாரும் பணியை 7 கிலோமீட்டர் நீளத்துக்கு பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
நாகை மாவட்டம், திருப்பூண்டி அருகே பூவைத்தேடி, காமேஸ்வரம் மற்றும் புஷ்பவனம் பகுதி விவசாயிகளுக்கு காவிரி நீர் கை கொடுக்காததால் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பழைய சந்திரநதி பாசன வாய்க்காலை தூர்வாரி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யாத நிலையில், திருப்பூண்டி முதல் பி ஆர் புரம் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தூர்வாரும் பணியை கிராம மக்களே ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.