கைதி விடுதலை விவகாரம் - உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி

ஆயுள் கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-31 21:03 GMT
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யோகா செந்தில் என்பவரை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை யொட்டி முன் கூட்டி விடுதலை செய்ய கோரி
அவரது தாய் அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 6 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டது. இதை அமல்படுத்தவில்லை என்று கூறி,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது  அரசு தலைமை 
வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, சிறை அதிகாரி பரிசீலித்து
சிறைத்துறை தலைவருக்கு அனுப்பபடும் மனுக்கள் உள்துறை 
மூலம் ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் யோகா செந்திலை முன்கூட்டி விடுதலை கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறினார். 

தர்மபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அரசு  முன் கூட்டி விடுதலை செய்திருப்பதையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க அரசு தீர்மானம் இயற்றியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது 
ஏன் என கேள்வி எழுப்பினர்.

சந்தர்ப்ப வசத்தால் குற்றம் புரிந்த செந்தில் போன்றவர்களை விடுவிப்பதில்  சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டுவதாக கூறிய நீதிபதிகள் 
10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும் 
எனக் கூறிய நீதிபதிகள், அரசியல் அழுத்தம் காரணமாக இதுபோல 
முடிவுகள் எடுக்கப்படுகிறதா என்றும்  கேள்வி எழுப்பினர். 

யோகா செந்தில் விவகாரத்தில் அரசு மாற்று நிலைப்பாடு எடுக்க காரணம் 
என்ன என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை உத்தரவுக்காக நாளைக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்