"75,448 பயணாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது" - உடுமலை ராதாகிருஷ்ணன்
2016-17 நிதி ஆண்டில் இலவச திட்டங்களுக்கு வெகுவாக நிதி குறைக்கப்பட்டது என்ற தகவலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கணக்கு தணிக்கை அறிக்கையில், இலவச கறவை பசு வழங்கும் திட்டத்திற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடந்த 2016-17ஆம் ஆண்டு வறட்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டதால், திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், தற்போது பசுக்கள் வழங்கி வருவதாகவும் கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் 75 ஆயிரத்து 448 பேருக்கு 274 புள்ளி 65 கோடி ரூபாய் செலவில் இலவச பசு மாடுகள் வழங்கி உள்ளதாகவும் கூறினார். தணிக்கை துறையின் அறிக்கை எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.