அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!

அரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

Update: 2018-07-17 03:33 GMT
10 ஆண்டுகள் முன்பு வரை,  அரசு பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்களும் படித்து வந்தனர். இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது. அதுவும், கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிக கடுமையாக சரிந்திருக்கும் அதிர்ச்சித் தகவல், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..

இதன்படி, 2014-15ல் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவர்கள் படிப்பதாக கூறப்பட்டது. இது, 2018 -19 ல் 46 லட்சத்து, 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நான்கே ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் சரிந்திருக்கிறது.

இதேநேரத்தில், தனியார் பள்ளி மாணவர் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2014-15-ல், 45 லட்சத்து 96 ஆயிரத்து 909 ஆகவும், 2018-19-ல் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 ஆக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நகரங்களுக்கு புலம் பெயரும் மக்கள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதே, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிய முக்கிய காரணம் என கூறும், கல்வியாளர் அஜீத் பிரகாஷ் ஜெயின், தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நவீன முறைகளில் பாடம் நடத்த பயிற்சி அளித்தால், மாணவர் எண்ணிக்கை மேலும் சரியாமல் இருக்கும் என்கிறார்.  


இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே கொடுக்கும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், அதையும் தாண்டி, மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடித்தால், அரசு பள்ளிகளே இல்லாத அபாய நிலை உருவாகிவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோள்..
Tags:    

மேலும் செய்திகள்