ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் - மத்திய கணக்கு தணிக்கை துறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே, 2015-ல் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியதற்கு காரணம் என மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.;
சென்னை பெருவெள்ளம் - அதிர்ச்சி அறிக்கை
தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007-ல் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆயிரத்து 554 குளங்களில் 551 குளங்களை மட்டுமே நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. மார்ச் 2016 வரை 36 ஆயிரத்து 814 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கண்டறியப்பட்டு, 30 சதவீத கட்டடங்கள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன.
381 குளங்கள் முழுமையான கொள்ளளவுக்கு நிரம்ப முடியாமல் ஆக்கிரமிப்புகள் பெரும் தடையாக நீடித்து வருகிறது என்ற சோகப் பதிவும் அறிக்கையில் உள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. வலுவான சட்டங்கள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டும் 2013 - 14ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையே எடுக்காதது 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்க்கான ஒரு காரணமாக அமைந்தது என மத்திய கணக்குத் தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.