விதிகளை மீறி விளம்பர பேனர்கள்...தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி...
சென்னையில் விமான நிலையம் முதல் சாந்தோம் வரை விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டுள்ளார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வேறு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்திருந்தார். அப்போது சென்னையில் விமான நிலையம் முதல் சாந்தோம் வரை விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றி பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறி பேனர்கள் வைப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விஷயத்தை
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உரிய அறிவுறுத்தல் வழங்குவதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், எந்த தலைவர்களும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டும் என விரும்புவதில்லை என்றும், அவர்களின் ஆதரவாளர்கள் தான் விளம்பரத்துக்காக பேனர்கள் வைப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.