பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்

நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்ததை போலீஸில் சொல்லிவிடுவேன் எனக்கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2018-06-19 13:34 GMT
சென்னை நுங்கம்பாக்கம் சாலையோரத்தில் வசித்து வருபவர் பெருமாள். கட்டுமான தொழிலாளியான இவரது கடைசி மகன் ராஜேஷ், கடந்த14ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. தேடி அலைந்தும் ராஜேஷ் கிடைக்காததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன்  முன்னிலையில், இந்த கொலையை நாங்கள் தான் செய்தோம் எனக்கூறி 3 பேர் சரணடைந்தனர். சரணடைந்த சூளைமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் பரத் மற்றும் 17 வயது உடைய இரண்டு சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

 
அதில், கத்தியை காட்டி செல்போன், பணம் பறித்ததோடு, சுடுகாட்டில் கஞ்சா புகைத்ததை காவல்துறையிடம் சொல்லிவிடுவேன் என ராஜேஷ் மிரட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து, இதனால் அவனை அடித்து கொன்று சுடுகாட்டில் புதைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  3 பேர் சரணடைந்த தகவல் அறிந்து காவல்நிலையம் முன்பு குவிந்த ராஜேஷின் உறவினர்கள், வேறு யாருக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என வலியுறுத்தினர். 


சிறுவன் ராஜேஷின் உடலை தோண்டி எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஒரு இளைஞர் 2 சிறுவர்கள் இணைந்து 15 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்று, சுடுகாட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்