தடுப்பூசி செலுத்தினால் 100 டாலர்கள் - அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் புதிதாக தடுப்பூசி செலுத்துவோருக்கு 7 ஆயிரத்து 436 ரூபாயை பரிசு தொகையாக வழங்க மாகாண அரசுகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் புதிதாக தடுப்பூசி செலுத்துவோருக்கு 7 ஆயிரத்து 436 ரூபாயை பரிசு தொகையாக வழங்க மாகாண அரசுகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா முதல் அலையில் உலகிலேயே மோசமான பாதிப்புகளையும், இறப்புகளையும் சந்தித்த அமெரிக்காவில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதில் அரசு வேகம் காட்டியது.
வைரஸ் பரவல் குறைய தொடங்கியதும் மக்களிடம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஆர்வம் காணப்படவில்லை.
நாட்டில் மறுபடியும் உருமாறிய கொரோனா வைரஸ்களால் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.
முக கவசங்கள் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் இருப்பதும், தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள மந்தமும்தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், இல்லினாய் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டிச் செல்லும் நிலையில், இப்படியே சென்றால் நாடு மீண்டும் மோசமான சூழலை எதிர்க்கொள்ள நேரிடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையை விடுத்தனர்.
இதற்கிடையே நாட்டில் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 99 % பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வோருக்கு 100 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்க வேண்டும் என மாகாண அரசுக்களுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
100 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 7 ஆயிரத்து 436 ரூபாயாகும்.
அமெரிக்காவில் இதுவரையில் 49.8 % பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில், டெல்டா வைரஸ் பரவுவதையொட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அரசு பணியாளர்கள் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும், இல்லையெனில் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story