அதிகரிக்கும் கொரோனா தொற்று : மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

தென் அமெரிக்க நாடான பெருவில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து அந்நாட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கும் கொரோனா தொற்று : மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்
x
தென் அமெரிக்க நாடான பெருவில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து அந்நாட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் லிமாவில் திரண்ட ஏராளமான மருத்துவர்கள், படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகரிக்கக் கோரியும், தங்களுக்கான சம்பளத்தை உயர்த்தக்கோரியும் போராட்டம் நடத்தினர். 

பிரேசிலை மீண்டும் மிரட்டும் கொரோனா : ஒரே நாளில் 4,211 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், அங்கு ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமனோர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 869 பேர், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 211 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம், பிரேசிலில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்து உள்ளது. சா பலோ, பிரேசிலியா உள்ளிட்ட பகுதிகளில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

"தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கப்படமாட்டது" - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் என்னும் சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற பெயரில் செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மக்களின் ஒவ்வொரு தகவலும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தடுப்பூசி பாஸ்போர்ட்கள் வழங்கப்படாது என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: வெனிசுலாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து அந்நாட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் கராகசில் உள்ள மருத்துவமனை முன்பாக திரண்ட அவர்கள், தடுப்பூசி போதிய அளவு இல்லாததால், பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், சடலங்களைப் போல், பாலித்தீன் பைகளை வடிவமைத்து வெனிசுலா அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

"18வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 6 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதில் 75 சதவீதம் நபர்கள் 65 வயதை கடந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

கொலம்பியா : கொரோனாவுக்கே பயம் காட்டிய மூதாட்டி

கொரோனாவுக்கே பயம்காட்டும் விதமாக, கொலம்பியாவை சேர்ந்த 104 வயது மூதாட்டி, இரண்டு முறை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளார். வடக்கு கொலம்பியாவின் டுன்ஜா நகரை சேர்ந்த ஹெர்னான்டஸ் என்ற மூதாட்டி, கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி செலுத்திய பிறகும் அவர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2-ஆவது முறையாக, குணம் அடைந்து உள்ளார். 104 வயது மூதாட்டி இரு முறை, கொரோனாவில் இருந்து குணமாகி இருப்பது மருத்துவர்களை ஆச்சர்யமடைய செய்து உள்ளது.

ஆஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி  : இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள்

ஆஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இரத்த உறைதலுக்கும் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக  ஐரோப்பிய மருந்துகள் நிறுவன உயர் அதிகாரி மார்கோ கார்வெலரி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எதனால் இந்த இரத்த உறைவு ஏற்படுகிறது என்ற காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்