பாதுகாப்பில்லாத பேய் நகரம் ; அதிகாரிகள் எச்சரித்தும் படையெடுக்கும் பயணிகள்
"பேய் நகரம்" என்றும், "பாதுகாப்பில்லாத இடம்" என்றும் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தும், பொது மக்கள் ஆர்வ மிகுதியால், தினமும் பயணிக்கும் நிலையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மேற்கு ஆஸ்திரேலியாவில், Wittenoom நகரத்தில், கல்நார் சுரங்கம் என்ற இடம் உள்ளது. Asbestos எனப்படும் கல்நார், இயற்கையாக கிடைக்கும் ஒரு வகை சிலிகேட் கனிமம் என்று கூறப்படுகிறது. இந்த சுரங்கமானது, ஆஸ்திரேலியாவின் பெர்த்திற்கு (Perth) வடக்கே, 1,100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ''இந்த பேய் நகரத்திற்கு செல்ல வேண்டாம்'' என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதற்கு செவி மடுக்க யாரும் தயாராக இல்லை. திகிலில் ஆர்வம் கொண்டவர்கள், தினமும் இங்கு வருகின்றனர். இந்த கல்நார் சுரங்கம், 1970 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
ஒரு காலத்தில், இது பரபரப்பான சுரங்கப்பகுதியாக இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சுரங்கத்தில் பணி புரிந்தனர். ஆனால், துரதிருஷ்டமான ஒரு நாளில் கல்நார் சுரங்கத்தில் நடந்த விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து இது, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு செல்வதும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள போபாலில் நடைபெற்ற விபத்தைவிட மோசமான விபத்து அது. அந்த நகரத்திற்கு செல்வது பாதுகாப்பானது இல்லை என்றும், அங்குள்ள சூழலியல் மாசினால் உடல்நல கேடுகள் ஏற்படலாம் என்றும், அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர.
''அங்கு செல்லாதீர்கள்'' என்று எச்சரிக்கும் வண்ணம் வழி நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை கேட்கதான் யாரும் தயாராக இல்லை. மக்கள் தினம் தினம் சுவாரஸ்யத்திற்காக அங்கு செல்கின்றனர். சிறிது நேரம் அங்கு செலவிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது என்கிறார்கள். தடை செய்யப்பட்ட இந்த சுரங்கமானது, அருவிகள் நிறைந்த கரிஜினி தேசிய பூங்காவுக்கு செல்லும் வழியில் இருக்கிறது.
அந்த பகுதி முழுவதும் மாசு கலந்து இருப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், ஆர்வக் கோளாறால் செல்லும் சுற்றுலா பயணிகள், தமது சமூக வலை தள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த காணொளியை சமூக ஊடகத்தில் கண்ட அரசு அதிகாரிகள், அங்கு செல்வது எந்த வகையிலும் பாதுகாப்பானது இல்லை என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு செல்வதால் நுரையீரல் புற்றுநோய்கூட வரலாம் என்றும் கூறிவிட்டனர். ஆனால், பயணங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
Next Story