திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா முழக்கம்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது...

திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலையில் அண்ணாமலையர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது திருக்கார்த்திகை தீபத்திரு விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்

தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்மன்,பராசக்தியம்மன்,முருகர்,விநாயகர் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடந்து அதிகாலை 5.00 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இந்த கொடியேற்ற விழாவில் தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கோவில் இணை ஆணையார் ஜோதி உள்ளிட்டவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடந்து 10 நாட்கள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா நடைபெறும். வரும் 26ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவரையின் முன்பாக பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்