பெற்ற பிள்ளைகளுக்கு எமனாக மாறிய தந்தை... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சித்ரவதை வீடியோ...

x

ஈவு இரக்கமின்றி நான்கு வயது சிறுமியின் முடியை பிடித்து கண்ணத்தில் ஆக்ரோஷமாக அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிக்கும் கோரகாட்சி தான் இது.

சிறுவனை அணு அணுவாக சித்ரவதை செய்த அந்த கொடூர கைகள், அடுத்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையையும் விட்டு வைக்கவில்லை.

நெஞ்சை உருக்குலைக்க வைக்கும் மழலைகளின் அந்த அலறல் சத்தத்தை ரசித்துக்கொண்டே வீடியோவாக பதிவு செய்திருக்கிறது, அந்த மிருகம்.

பார்க்கவே குலை நடுங்க செய்யும் இந்த பகீர் காணொளி எங்கே எடுக்கப்பட்டது...? அதை செய்த அரக்கன் யார்...? இந்த கொடூரத்திற்கான காரணம் என்ன...? என்பதை அறிய விசாரனையில் இறங்கினோம்.

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம்...

சம்பவம் நடந்த அன்று இந்த பகீர் வீடியோவை மலேசியாவில் இருந்து ஒரு பெண், அதிகாரிகளுக்கு வாட்சாப்பில் அனுப்பி இருக்கிறார்.

வீடியோவில் இருப்பது தனது பிள்ளைகள் என்றும், குழந்தைகளை உடனே காப்பற்றுங்கள் என்றும் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனே அதிகாரிகள் சேரம்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, போலீசார் இந்த வீடியோ எடுத்த இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் போலீசாருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி...

கல்நெஞ்சக்காரர்களும் செய்ய மறுக்கும் இந்த கோர செயலை செய்தது வேறு யாருமல்ல... அந்த பிள்ளைகளை பெற்ற தந்தை. ஆம்... உயிர் கொடுத்த தந்தையே உயிர் எடுக்க துணிந்ததன் காரணம் மனைவியின் பிரிவு.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கோரஞ்சால் பகுதியை சேர்ந்தவர் தான் அந்த கொடூர தந்தை சூர்யா என்ற ரவி. 30 வயதாகும் இவர் ஒரு கூலித்தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 4 வயதிலும், ஒன்றரை வயதிலும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

குடும்பத்தின் வறுமை காரணமாக ஜெயலட்சுமி இரண்டாவது மகள் பிறந்த உடனே மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் இந்த வெளி நாட்டு வேலையில் சூர்யாவுக்கு துளியும் விருப்பமில்லை.

மலேசியாவுக்கு செல்ல வேண்டாம் என மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் குடும்பத்தில் வறுமை தாண்டவமாட, பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பிளைட் ஏறி இருக்கிறார் ஜெயலட்சுமி.

அன்று முதல் தினமும் மனைவியை போனில் அழைத்து நாடு திரும்ப சொல்லி மன்றாடி இருக்கிறார் சூர்யா. 4 வருடம் முடிந்த பின் தான் ஊர் பக்கம் தலை வைத்து படுப்பேன் என பிடிவாதமாக ஜெயலட்சுமி கூறி கணவனின் இணைப்பை துண்டித்துள்ளார்.

நாட்கள் மாதமாக மாதம் வருடமாக உருண்டோடி உள்ளது. மனைவியின் பிரிவும், ஊர் திரும்ப மறுத்த பிடிவாதமும் சூர்யாவை வெறிபிடிக்க வைத்திருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று மனைவிக்கு போன் செய்து ஊருக்கு வருவியா மாட்டியா என கோவமாக கேட்டிருக்கிறார். "இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், கடன அடச்சிட்டு தான் ஊருக்கு வருவேன் போய் வேலய பாரு"என சொல்லி தட்டி கழித்திருக்கிறார் ஜெயலட்சுமி.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சூர்யா மனைவியை ஊருக்கு வரவழைக்க அந்த கொடூரத்தை செய்ய துணிந்திருக்கிறார். மனைவியின் மீதிருந்த அத்தனை கோபத்தையும் ஒரு பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் காட்டி உள்ளார்.

கண்ணத்தில் அடிப்பது, கழுத்தை நெரித்து கொலை செய்ய துணிவது என வெறிகொண்டு செயல்பட்டிருக்கிறார்.

இந்த பயங்கரத்தை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பினால், குழந்தைகள் மீதிருந்த பாசத்தில் ஊருக்கு வருவார் என்ற நம்பிக்கையில் மனைவியின் வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி விட்டு காத்திருந்துள்ளார் சூர்யா.

ஆனால் அங்கு வந்ததோ போலீஸ்... சூர்யா போட்ட கணக்கு தப்பு கணக்காகி விட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆதரவாய் இருந்து அரவணைக்க வேண்டிய தகப்பனே, இப்படி எமனாக மாறி பிள்ளைகளின் உயிர் எடுக்க துணிந்தது கொடுமையின் உச்சம்...


Next Story

மேலும் செய்திகள்