சாலை விபத்தில் உயிரிழந்த கணவர்..கணவனை காண பதறியடித்து வந்த மனைவி..ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், பார்க்க சென்ற மனைவியும் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆற்காடு அடுத்த எசையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம். பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த நிலையில், மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது மனைவி சுந்தரி, கணவரின் உடலை பார்க்க தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வாகனம் வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுந்தரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். உயிரிழந்த கணவனின் உடலை பார்க்கச் சென்ற மனைவியும் சாலை விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்