BREAKING || டேட்டா வங்கியில் பெற்றோர், குழந்தைகள் DNA - நீதிமன்றம் உத்தரவு

x

குழந்தை மீட்கப்படும் போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க முடியும்- உயர்நீதிமன்ற கிளை.

இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்- நீதிபதி.

உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நெல்லையை சேர்ந்த கணவன், மனைவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு,

எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில் திருமணமாகாத பெண் ஒருவருக்கு பிறந்த ஆண் குழந்தை எங்களுக்கு கிடைத்தது. அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முயன்ற போது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குனர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளை பின்பற்றவில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பில் இருந்துள்ளது.

குழந்தை கடத்தப்பட்டிருந்தால் அந்த குழந்தையை மீட்டு உண்மையான பெற்றோரிடம் ஒப்படைப்பது தான் நியாயமானது. இங்கு ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால் போலீஸார் இன்னும் உண்மையை கண்டுபிடிக்கவில்லை.

குழந்தைகள் மாயம் தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன. குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விபரங்களை சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும்.

குழந்தை மீட்கப்படும் போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க முடியும்.

இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் மேற்கண்ட நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். குழந்தை கடத்தப்படாவிட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் எதிரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடித்து 3 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளில் தளர்த்த வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்