நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களிடம் அத்துமீறிய வட மாநில இளைஞர்கள் - சேலம் அருகே அதிர்ச்சி

x

ஓமலூர் அருகே, கிராமப்புற குடியிருப்புகளில் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஊர் மக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பானது...

சேலம் மாவட்டம் தும்பிபாடி ஊராட்சி பகுதியில், தனியார் இரும்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் பணியாற்றிவரும் நிலையில், சிலர் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் அவ்வப்போது புகுந்து, வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, நேற்று இரவு 3 மர்ம நபர்கள் பள்ளர் காலனி பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் புகுந்து அங்குள்ள பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இவர்களை அக்கம் பக்கத்தினர் விரட்ட முயன்றபோது, மர்ம நபர் தாக்கியதில் ஆறுமுகம் என்பவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்ற பொதுமக்கள், தனியார் இரும்பு நிறுவனத்தில் நுழைவதை கண்டு, ஒருவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மற்றவர்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்படி, தனியார் நிறுவனத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்