முதல்வர் உரையை ஒளிபரப்ப தடை போட்டதா மத்திய அரசு?.. நடந்தது என்ன? - இலங்கை அமைச்சர் பரபரப்பு விளக்கம்

x

கொழும்பில் இடம்பெற்ற நாம் 200 நிகழ்வில் தமிழக முதல்வரின் உரை புறக்கணிக்கப்பட்டதா?

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடம் பூர்த்தியாவதனை முன்னிட்டு கடந்த 2ம் கொழும்பில் அரச விழா ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்ததோடு, தமிழ் சம்பிரதாய முறைமைகளுக்கமைய ஜனாதிபதிக்கு கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளாதபோதிலும் அவரது வாழ்த்து செய்தி ஒன்று காணொளி வடிவில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆனால் இது அன்றைய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பில் இடம்பறவில்லை என தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த காணொளி சமுக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளையில் மறுநாள் 3ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வரின் உரை ஒளிபரப்பப்படாமைக்கு அந்த காணொளி தாமதமாக கிடைத்தததாகவும் அதனால் அந்த நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ள முடியாமல் போனதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான விளக்கமளித்துள்ளார்.

தமிழக முதல்வரின் காணொளியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

" இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்." - என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'நாம் 200' தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்வு என்பது 200 ஆண்டுகளை எட்டுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக தனிபெரும் இனமாக வாழ்ந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்நிகழ்வில் காணொளிமூலம் நான் உரையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த அருமை சகோதரர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றிகள்.

மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையக தோட்டங்களாக மாற்றியவர்கள்தான் மலையக தமிழர்கள். 1823 இல் இலங்கையில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பமானதில் இருந்துதான் மலையக தமிழ் தொழிலாளர்களின் வரலாறு தொடங்குகின்றது. கோப்பி தோட்டங்கள் பெருக, பெருக இந்திய தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அதன்பின்னர் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது. அதனையும் மலையக மக்கள் பலப்படுத்தினார்கள். பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும், காடுகளாக இருந்த நிலத்தை காசு பயிர்களாக விளைவித்தும் பின்தங்கிய பொருளாதாரத்தை முன்தங்கிய பொருளாதாரமாக மாற்றியவர்கள்தான் மலையக தோட்டத்தொழிலாளர். இப்படி கடந்த 200 வருடங்களாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினர். வழங்கியும் வருகின்றனர்.

இலங்கை நாட்டுக்காக தமது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது இரத்தத்தையும், வியர்வையையும், காலத்தையும், கடமையையும் இலங்கைக்காகவே ஒப்படைத்தவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம் முதல் புலம்பெயர் தமிழர்களின் உரிமையைக் காப்பதில் கண்ணும், கருத்துமாக செயற்பட்டது. வாக்குரிமைக்காக குரல் கொடுத்தது. இப்படி தமிழர் மக்களின் உரிமைக்காக ஆரம்பக்காலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக்கழகம்.

மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். மலையகத் தமிழர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும்போல கல்வியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், அவர்கள் மேலெலும் காலத்தை எதிர்பார்த்து தமிழகம் காத்திருக்கின்றது. சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்." - என்றார்.


Next Story

மேலும் செய்திகள்