அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு
x
தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம். இந்த நிலையில், சின்னங்களை பற்றி சின்னதா ஒரு வரலாற்று பின்னணியை பார்க்கலாம்..


சுதந்திரம் பெற்றதும் நடந்த தேர்தல்களில் எல்லாம் சின்னங்கள் என்ற கான்செப்டே கிடையாது. வண்ணங்கள் மட்டும் தான். காங்கிரஸ் கட்சி என்றால் மஞ்சள் நிற பெட்டி. இதுபோல, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ, அந்த கட்சிக்கான வண்ணப் பெட்டிகளுக்குள்  வாக்குச் சீட்டை போட வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தலில் தான் சின்னங்களே அறிமுகமாகின. அந்த தேர்தலில் காங்கிரசின் சின்னம் இரட்டை காளை. ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம். திமுகவுக்கு, அது முதலாவது தேர்தல் என்பதால் சுயேச்சையாக கருதி தனியாக சின்னம் ஒதுக்கவில்லை.

கருணாநிதிக்கு மட்டுமே உதய சூரியன் சின்னம் கிடைத்தது. அண்ணா, நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு கிடைத்த சின்னம், சேவல். 1962 தேர்தலில்தான் திமுகவுக்கு நிரந்தர சின்னமாக உதய சூரியன் கிடத்தது.

1972ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, மறு ஆண்டிலேயே சந்தித்த தேர்தல்,   திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தல். அதில்,  இரட்டை இலை சின்னம் அமோக வெற்றியை பெற்றுத்தர, அதுவே, கட்சியின் நிரந்தர சின்னம் ஆனது.

எம்ஜிஆர் மறைந்ததும் அதிமுக பிளவு பட்டபோது, ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அம்மாளின் அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஒரே சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது,  சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வதற்காக உயிருள்ள விலங்கு, பறவைகளை எடுத்துச் செல்லும் போக்கு வேட்பாளர்கள் மத்தியில் அதிகரித்ததால் அவை தடை செய்யப்பட்டன. இப்போதெல்லாம் உயிரற்ற பொருட்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சினனங்களாக வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல, அன்றைய தேர்தல்களில் எல்லாம், கூட்டணி கட்சியை தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுமாறு பெரிய கட்சிகள் நிர்பந்தம் செய்வது கிடையாது. 1980ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை குமரி அனந்தன் ஆரம்பித்திருந்தார். அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டது ரோஜாப்பூ என்ற தனி சின்னத்தில் தான்.

1996ம் ஆண்டு தேர்தலுக்கு நாற்பதே நாட்களுக்கு முன் ஜி.கே.மூப்பனார்  ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் என்ற சின்னத்தை பிரத்யேகமாக ஒதுக்கியது, தேர்தல் ஆணையம். 

சமீப காலமாக, புதிய கட்சிகளுக்கென பிரத்யேக சின்னத்தை ஒதுக்கும் நடைமுறை குறைந்து வருகிறது. இதனால்தான் மக்கள் நீதி மய்யம் வரையிலான புதிய கட்சிகளும் சின்ன பிரச்சினையை நீதிமன்றம் வரை பெரிய பிரச்சினையாக எடுத்துச் செல்கின்றன.

தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மக்களை பொறுத்தவரை சின்னம் என்பது பெரிய பிரச்சினை என்றே தெரிகிறது. 1980 தேர்தலில் குமரி அனந்தனின் ரோஜாப் பூ சின்னம் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுபோல, 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையால்,  அனுதாப அலை வீசியபோதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிங்கம் சின்னத்தில் தாமரைக்கனி, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் திருநாவுக்கரசர், பண்ருட்டியில் யானை சின்னத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் என வெற்றிக் கனியை பறித்தனர். 

2006 தேர்தலில் விருத்தாசலத்தில் முரசு சின்னத்தில் விஜயகாந்தும், 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனும் வென்றது அறிமுகமில்லா சின்னத்தில்தான். 1996ல் கட்சி ஆரம்பித்த நாற்பதே நாளில் தமாகா மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் புதியதான சைக்கிள் சின்னத்தில்தான். 

இப்படியாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், சின்னங்கள் சொல்லும் பெரிய சுவாரஸ்யஙகள் இன்னும் ஏராளமான இருக்கின்றன.  அவற்றையும் பார்ப்போம்..

Next Story

மேலும் செய்திகள்