இன்று டிச.23 தேசிய விவசாயிகள் தினம்

உலகமே உழவுத் தொழிலால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை எந்தச் சூழலிலும் விட்டு விலகாத விவசாயிகளை போற்றும் விதமாக இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது...
இன்று டிச.23 தேசிய விவசாயிகள் தினம்
x
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார், தெய்வப்புலவர் திருவள்ளுவர். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார், பாட்டுக்கொரு புலவன் பாரதி. 

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே, நாம் சோற்றில் கை வைக்க வேண்டும் என்பது, யாவரும் அறிந்த பழமொழி. உழவுக்கு இணையான உயரிய தொழில் ஒன்று உலகில் இருக்க முடியாது. 

இந்தத் தொழிலில் அரும்பாடு பட்டு உழைத்தும், வீட்டுக்கு எதையும் எடுத்துச் செல்ல முடியாமல் வறுமையில் நொந்து கிடந்த விவசாயிகளின் நலனுக்காகவே, வெறும் ஏழு மாத காலமே பிரதமராக இருந்த, சவுத்ரி சரண் சிங் ஜமீன் தாரி ஒழிப்பு முறை சட்டத்தைக் கொண்டு வந்தார். 

விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் வகையில், வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும், அவர் அறிமுகப்படுத்தினார். அவரின் நினைவாகவே, டிசம்பர் 23ஆம் தேதியான இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

உழவுத் தொழில் பெருமைக்குரியது என்றாலும், இழப்புகளையே அதிகம் சந்திப்பதாக, இப்போதும் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் விவசாயிகள். 

காய்ந்து கெடுத்தது, பேய்ந்தும் கெடுத்தது என்பார்கள்... அந்த வலியின் மொழியை வாய்விட்டு கதறும் விவசாயிகளின் நிலை, இன்னமும் மாறவே இல்லை. இயற்கையோடு உழவுத் தொழில் ஒன்றி இருப்பதே, இத்தனை துயரங்களுக்குக் காரணம். 

விவசாயிகளின் துயரைத் துடைத்து, வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என வாக்குறுதி அளித்த மோடி தலைமையிலான பாஜக அரசு. அதன் தொடர்ச்சியாக, மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. 

இந்தச் சட்டங்களால் விவசாயிகள் தரம் பன்மடங்கு உயரும் என்று மத்திய அரசு தெரிவித்தாலும், குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை, இந்தச் சட்டங்கள் பறிப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசில் அங்கம் வகித்த கூட்டணி கட்சியை சேர்ந்த  ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.   

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களின் விவசாயிகள், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி சலோ என்ற பேரணியாக வந்த நிலையில், எல்லைகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளை எட்டியுள்ளது. 

அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மறுபுறம், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விளக்கக் கூட்டங்களை பா.ஜ.க.-வினர் நடத்துகின்றனர். 

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை, நாளை குடியரசுத் தலைவரிடம் வழங்க இருக்கிறது, காங்கிரஸ்
  
இந்தியாவின் முதுகெலும்பாக, 70 சதவீதம் மக்களின் நேரடி வாழ்வாதாரமாக விளங்கும் உழவுத் தொழில், செழித்தோங்க தேவையானதை செய்து வரும் அரசு, விவசாய சங்கங்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.   


Next Story

மேலும் செய்திகள்