சுவற்றில் விளம்பரம் எழுவதில் திமுக - பாஜக இடையே மோதல்

சுவற்றில் விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று திமுக- பாஜக இடையே நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே சுவற்றுக்காக அரசியல் கட்சிகளின் இந்த போட்டி தொடங்கியிருப்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சுவற்றில் விளம்பரம் எழுவதில் திமுக - பாஜக இடையே மோதல்
x
சென்னையை அடுத்த நங்கநல்லூர் வோல்ட்ஸ் காலனி 50 அடி சாலையில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் சுவற்றில் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது... பிறந்தநாள் தான் முடிந்து போயிற்றே என நினைத்த திமுக அந்த விளம்பரத்தை அழித்து விட்டு அதன்மேல் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்த விளம்பரத்தை எழுதியது... இதை பார்த்து கொதித்து போய் விட்டனர் பாஜக நிர்வாகிகள்... எங்களின் விளம்பரத்தை அழித்து விட்டு எழுத நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய படி கூட்டமாக களத்தில் இறங்கினர். இதனால் திமுக, பாஜக இடையே வார்த்தை போர் கிட்டத்தட்ட வன்முறையாக மாறியது. இரு தரப்பும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, திமுக நிர்வாகியான நடராஜன், தன் இருசக்கர வாகனத்தை பாஜக மகளிரணியை சேர்ந்த 2 பெண்கள் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் பெண்கள் 2 பேருமே படுகாயமடைந்தனர்... விபத்து ஏற்படுத்தும் நோக்கில் அவர் செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் நடராஜனை துரத்திச் சென்று அடித்தனர்... இதில் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது... படுகாயங்களுடன் இருந்த திமுக நிர்வாகி நடராஜனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் இரு கட்சி தரப்புக்கும் தெரியவரவே, இரு தரப்பும் நங்க நல்லூர் பகுதியில் குவிந்தது... தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து இருதரப்பும் வாக்குவாதம் செய்யவே, போலீசார் இவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருவருமே அதை காது கொடுத்து கேட்காமல் கோஷங்கள் எழுப்புவதிலேயே குறியாக இருந்தனர். சுவர் உரிமையாளரின் அனுமதி பெறாமல் இனிமேல் யாரும் விளம்பரம் எழுதவே கூடாது என போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். எல்லாம் முடிந்த பிறகு இடத்தை விட்டு கலைந்து போகாமல் இருந்த பாஜகவினர் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் திமுக நிர்வாகி நடராஜனை போலீசார் கைது செய்தனர். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதே சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் இப்போதே களை கட்டி வருகிறது. சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள சுவர்களை குறிவைத்து இப்போதே அரசியல் கட்சிகள் விளம்பர கோதாவில் குதித்து வருகிறது... 


Next Story

மேலும் செய்திகள்