"66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை"

3 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 120 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1948ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அணையின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணிகள் 1955ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய முதல்வர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பவானிசாகர் அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண்அணை என்ற பெருமை கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்..  இதில் சேற்றை கழித்து 105 அடிக்கு அணையில் தண்ணீரை தேக்க முடியும். மொத்தம் 19 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.  பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த பவானி சாகர் அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும் , சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 

65 ஆண்டுகளை கடந்தும் சிறு விரிசல் இல்லாமல் மிக உறுதித்தன்மை வாய்ந்த அணையாக திகழ்கிறது. இந்த அணையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்