கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது
x
போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது



கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்த, கமல் பாபு  தன்னை ஒரு வங்கி மேலாளர் என கூறி வந்துள்ளார். மேலும், பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் போலி அவணங்களையும் தயார் செய்துள்ளார்.  மேலும், ரப்பர் ஸ்டாம்ப், பணம் போடும் படிவம், பணம் எடுக்கும் படிவம் உள்ளிட்டவையும் அவரிடம் இருந்துள்ளது. இந்த நிலையில் கமல்பாபு, வங்கி தொடங்குவதற்காக இடம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த, அப்பகுதி ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், போலி வங்கி துவங்க இருந்த கமல்பாபு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கமல் பாபுவின்  பெற்றோர்,  ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் என்பதால் அவர்கள் வங்கியில் வேலை செய்வதை பார்த்து வளர்ந்த அவர், போலியாக வங்கியை துவங்க  திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்த போலி வங்கி புத்தகங்கள், சலான்களை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரபல ரவுடி கொலை - கூட்டாளிகள் 2 பேர் கைது



திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி  கராத்தே மாரிமுத்து புதன் கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ரவுடி  கராத்தே மாரிமுத்துவின் கூட்டாளிகளே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து  கராத்தே மாரிமுத்துவின் கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முகநூல் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் - பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் கைது



சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான பிரபு என்பவர் சிறுமியை கடத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், மாணவியிடம் முகநூல் மூலம்  பழகிய பிரபு கடத்திச் சென்றது தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு-தட்டிக்கேட்டதால் ஆத்திரம் - டிராவல்ஸ் அதிபர் கொலை-குற்றவாளிகளுக்கு சிறை



சென்னை அடுத்த திருநின்றவூரில் டிராவல்ஸ் நடத்தி வந்த மகேந்திரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பியோடியது. அதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், மகேந்திரனை கொலை செய்த, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் சாலையில் செல்வோரிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்த தமிழ்ச்செல்வனை, மகேந்திரன் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் கொலையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகலிலும் கழுதை மூலம் கள்ளச்சாராய விற்பனை - குற்றவாளிகளை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை



வாணியம்பாடியை அடுத்த மேல்குப்பம் மலைப்பகுதியில் நள்ளிரவு மற்றும் பகல் நேரங்களிலும் இளைஞர்கள் எரிசாராயம் காய்ச்சி வருவதாக புகார் எழுந்துள்ளது. வெல்லம் உள்ளிட்ட இதர பொருட்களை கழுதைகள் மூலமாக மலைப் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள பெரிய பேரல்களில் ஊறவைக்கப்பட்டு எரிசாராயம் காய்ச்சி வருவதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலை விபத்து - சம்பவ இடத்திலேயே இருவர் பலி



ஒசூர் அருகேயுள்ள குட்டலப்பள்ளி கிராமத்தில் டிப்பர் லாரி ஒன்று அங்குள்ள கல்குவாரியிலிருந்து ஜல்லிகற்களை ஏற்றி சென்றபோது முன்னே சென்ற இருசக்கரவாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிப்பர் லாரிகளால் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒசூர் டிஎஸ்பி முரளி, விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

லாரி மூலம் கிரானைட் கடத்த முயற்சி - வாகனங்களை மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு



தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மொரப்பூர் பகுதியில் கிரானைட் கற்களை கடத்தியதாக வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர். முன்னதாக,  மாவட்ட நிர்வாகத்தால் அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கற்களை லாரி, கிரேன், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது .  இதனையடுத்து, அந்த இடத்தில் உள்ள கிரானைட் கற்களை கடத்தியதாக வாகனங்களை, மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு வந்த அரசு அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

புகையிலைப் பொருட்கள் பதுக்கல் - ஒருவர் கைது



காஞ்சிபுரம் மாவட்டத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுங்குவார்சத்திரம் பஜார் வீதியில் மணிகண்டன் என்பவர் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், மணிகண்டன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை கைது செய்யப்பட்டார்.

புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து



சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் மினிவேன் கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டது. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, தனியார் பார்சல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் பார்சல்களை ஏற்றிக் கொண்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்ற மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து  கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து, அதில் இருந்த பார்சல்கள் சாலையில் கொட்டியதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கு - கணவனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்



மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில், கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்து, தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கு, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், குற்றவாளி வீரக்குமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பழைய வீட்டினை இடிக்க முயன்றபோது சோகம்- மேல் தளம் இடிந்து விழுந்து கட்ட‌ட தொழிலாளி உயிரிழப்பு



பல்லாவரம் அருகே தனக்கு சொந்தமான பழைய வீட்டினை இடிக்க முயன்றவர் மேல் தளம் இடிந்து விழுந்து பலியானார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கட்ட‌ட தொழிலாளியான சிவா தனக்கு சொந்தமான பழைய வீட்டினை இடிக்க முற்பட்டுள்ளார். கொரோனா காரணமாக வேலையாட்கள் யாரும் வராத‌தால் அவரே வீட்டை இடிக்க முயற்சித்த நிலையில், இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்