மணித்துளியை கூட வீணாக்க மாட்டேன் - பிரதமர் மோடி

ஒவ்வொரு மணித்துளியும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் பணிகளுக்கிடையே தந்திக்குழும செய்தியாளர்கள் சலீம் மற்றும் அசோக வர்ஷினிக்கு, பிரதமர் மோடி அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார். 

ஓய்வில்லாமல் உழைப்பதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளதை சுட்டிக் காட்டி , இதற்கான சக்தி தங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்று பிரதமர் மோடியிடம்  தந்திக்குழும செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ராணுவ வீரர்கள், விவசாயிகள், காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் உழைப்பதை பார்த்து தான், தானும் ஒவ்வொரு மணித் துளியையும் வீணாக்காமல் உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 69 வயது நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களது வாழ்க்கை எப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு, மக்களுக்கு சேவையாற்றுவதை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும், அதில் தன்னை விட சுகமாக இருப்பவர் வேறு யாரும் இல்லை என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து ராகுலின் பெயரை கேட்டதும் தங்களுக்கு தோன்றுவது அன்பா... வெறுப்பா.. அல்லது பகைமையா என்ற கேள்விக்கு, மூன்றும் தோன்றவில்லை என்றும், குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியல்ல என்று தாம் நினைப்பதாகவும்  மோடி கூறினார்.  



தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி, அமேதி, வயநாடு என இருதொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது போல, தங்களுக்கும்  ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா என்ற கேள்விக்கு, ஸ்மிருதி ராணியின் வேட்புமனு தாக்கல் காட்சிகளை பார்த்தாலே, ராகுல் ஏன் வேறு தொகுதிக்கு சென்றார் என்பது புரியும் என்றார்...  பாதுகாப்பிற்காக இன்னொரு தொகுதியை ராகுல்  தேர்வு செய்திருக்கலாம் என்றும் அவர்  தெரிவித்தார். ராகுல் கேரளாவை தேர்வு செய்வதால் தான் இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டதை  நினைவூட்டியபோது , தாம்  எப்போதும் சுயமாக முடிவெடுப்பதில்லை என்றும், கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாகவும் பிரதமர் மோடி  தெரிவித்தார். 



கூட்டணிக்காக அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது - பிரதமர் மோடி 

ராகுல் அல்லது பிரியங்காவுக்கும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது, உத்தரபிரதேசத்தில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேள்விக்கு, காங்கிரஸ் குடும்ப கட்சி, அதை காப்பாற்ற அவர்கள் இது போன்று செய்து தானே ஆக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை பொறுத்தவரை கர்நாடகம் தவிர, மற்ற இடங்களில் பாஜக வெற்றி பெற சிரமப்படுவது ஏன் என்ற  கேள்விக்கு, இது முற்றிலும் மாறுபட்ட கருத்து என்று பிரதமர் தெரிவித்தார்.. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா வடமாநிலங்கள் அல்ல என்றும், ஆந்திராவிலும் தங்களது ஆதரவில் ஆட்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்திலும் தங்கள் கட்சி அதிக அளவில் சீட்டுகளை வெல்லும் என்று அவர் நம்பிக்கை  தெரிவித்தார். தென்னிந்தியாவை தங்கள் கட்சி வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். 



2014ஆம் ஆண்டு தேர்தலில், அதிமுக, திமுக இல்லாத மாற்று அணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்ட தங்களது நிலைப்பாட்டில்  இப்போது மாற்றம் ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, திராவிட கட்சிகளுக்கும், தங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், அப்போது ஜெயலலிதா இருந்ததால் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம்.. ஆனால் தற்போது கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். கூட்டணிக்கு திமுகவை தவிர்த்து, அதிமுகவை தேர்வு செய்தது ஏன் என்ற  கேள்விக்கு அதிமுகவுடன் தங்களது கட்சிக்கு நீண்ட கால நட்பு உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அதிமுக தங்களுக்கு பூரண ஆதரவை அளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கூட்டணிக்காக அதிமுக நிர்பந்தப்படுத்தியதாக சில கட்சிகள் குற்றம் சாட்டியதை சுட்டிக்காட்டிய போது, அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்