கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்
x
சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்காக பணத்தை கட்டியதாகவும், சுமார் 87 லட்சம் ரூபாய் பணத்தை அதில் இழந்து ஏமாந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளங்கள் செயல்பட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்தது. 

இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனடிப்படையில் பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது வங்கி கணக்குக்கு சொந்தமான நபர் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தனது தந்தையின் மறைவிற்கு பிறகு ஆன்லைன் சூதாட்ட தொழிலையே பிரதானமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு, மேட்ச் பெட்டிங்கிலும் அவர் புக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், சுமார் 25 லட்சம் ரூபாய் பணம், 6 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், லேப்டாப், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்