வீட்டிலேயே சூதாட்ட கிளப்- நடிகர் ஷ்யாம் கைது - சொந்த ஜாமீனில் விடுவித்த நுங்கம்பாக்கம் போலீஸ்

வீட்டில் சூதாட்ட க்ளப் நடத்தியதாக திரைப்பட நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே சூதாட்ட கிளப்- நடிகர் ஷ்யாம் கைது - சொந்த ஜாமீனில் விடுவித்த நுங்கம்பாக்கம் போலீஸ்
x
தமிழில் 12 பி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.. தொடர்ந்து லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  சாக்லேட் பாய் தோற்றத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஹீரோ வாய்ப்பு இல்லாததால் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஷாம் நடித்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்றில், சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உள்ளிட்ட 14 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஷாமின் நண்பர்களான தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை கைது செய்த போலீசார் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், தனது நுங்கம்பாக்கம் வீட்டை ஷாம் சீட்டாட்ட கிளப்பாகவே பயன்படுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர் புகார்களால் ஷாம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்