"எண்ணிலடங்கா நினைவுகளுடன்.."- தாயகம் திரும்பும் முன் உணர்ச்சிவசப்பட்ட CM
"அன்பு உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்"
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய எழுச்சிப்பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுவதாக தெரிவித்துள்ளார். அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தனை நாளும் உங்கள் சகோதரனாய் தன்னை கவனித்துக்கொண்டதற்காக, தனது அன்பை நன்றியாய் நவில்வதாக குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, லண்டனில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில், இங்கிலாந்து வாழ் தமிழர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் போன்றவற்றால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்து வருவதாகத் தெரிவித்தார். ஆண்டுக்கு ஒருமுறையாவது நீங்கள் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்றும், உங்களால் முடிந்ததை தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.