"மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 % நிறைவு" - இலங்கை அதிபர் தகவல்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், தலைநகர் கொழும்புவில் நடந்தது. இதில் பேசிய அதிபர் மைத்ரி பால சிறிசேன, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக கூறினார். எஞ்சிய 12 சதவீத பணிகள் விரைந்து நிறைவு செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்தவும் இலங்கை அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக மைத்ரி பால சிறிசேன கூறினார்.