ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறியா? - தவறான தகவலால் பரபரப்பு
ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக தகவல் பரவியதை அடுத்து, ஆம்னி பேருந்தை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
கடலூர் மாவட்டம் குமராட்சி சேர்ந்த ஒருவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவர் சென்னைக்கு வந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் அவருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தப்பித்து ஆம்னி பேருந்து மூலம் சிதம்பரம் வருவதாக தகவல் பரவியதை அடுத்து, அந்த பேருந்தை புதுச்சேரி - கடலூர் சாலையில் கங்கனாங்குப்பம் என்ற இடத்தில் கடலூர் போலீசார் வழி மறித்தனர். இதையடுத்து அந்த பேருந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ஓமன் நாட்டில் இருந்து வந்தவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும், தேவையில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் மீண்டும் அதே பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.