"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-10 07:27 GMT
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் செகாவத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அதில், சுட்டிக்காட்டி உள்ளார். கடைமடை பகுதிகளுக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்க தற்போது காவிரி படுகையில் உள்ள அணைகள் போதுமானது என காவிரி நதிநீர் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில், புதிய அணை கட்டவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்துள்ள எண்ணற்ற வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே, மேகதாது திட்டத்தை நிராகரித்த நிலையில், தற்போது கர்நாடகா மீண்டும் அந்த அமைப்பை அணுகி உள்ளது தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்காமல் தவிர்ப்பதுடன், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்