ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பக்தர்களை கவர்கிறது.
நவராத்திரி பண்டிகை இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
9 நாட்களில் முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது அலங்காரங்கள் மூலம் முப்பெருந்தேவியரை பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சம்.
நவராத்திரியையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி கொலு ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசிப்பதுடன் வழிபட்டு செல்கின்றனர்.
நவராத்திரி விழாவின் 9 நாட்களும் தினமும் வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.