திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்
மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே டி பிரிவு எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, திருச்சி கோட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடந்த 2ஆம் கட்ட நியமனத்தில், பொறியியல் பிரிவில் 262 நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் தண்டவாள பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 39 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதர பிரிவில் நியமனம் செய்யப்பட்ட 89 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள் என சொல்லப்படுகிறது. தமிழக ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வேயில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியில் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.