"சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிப்பது மோசடி ஆகாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-09-17 10:21 GMT
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்,  கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ்,  மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர், அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது மோசடி ஆகாதா என கேள்வி எழுப்பினர். தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு, ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்து வழக்கு தான் தொடர முடியும் என கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்