சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இடத்தில் ஏசி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-03 09:23 GMT
சென்னையை அடுத்த போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் மேனன். இவரின் மனைவி பிந்து மேனன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் ஹாலில் இருந்த ஏ.சி. குறைந்த மின் அழுத்தம் காரணமாக வேலை  செய்யவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென வீட்டில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததால் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திடீரென தீப்பிடித்து அறை முழுவதும் புகை சூழ்ந்தது. இதைக் கண்ட 4 பேரும் அறையை விட்டு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

புகை அதிகமாக இருந்ததால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவியதில் பிரகாஷ் மேனன் மற்றும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். 

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வருவதால் மின்சாதன பொருட்களில் தீ பரவி விபத்து ஏற்படுவது தெரியவந்தது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சென்னையில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்