மனைவி மீது சந்தேகம் - வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்தவர் கொலை
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்த நபரை கணவர் கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கொத்தங்குடியை சேர்ந்த கருணாநிதி என்பவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு உதவி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் தேனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கருணாநிதி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மகன் வினோத்குமார் மற்றும் குடும்பத்தினர், பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் வினோத்குமாரை தொடர்பு கொண்டு, இதற்கு மேல் கருணாநிதியை தேடக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அஜ்மல்கான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த ஆஜ்மல்கானிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கருணாநிதியை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கருணாநிதி தனது மனைவிக்கு ஆஷா பானுவுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்ததாகவும், கருணாநிதியின் மகன் வினோத்குமார், ஆஷாபானுவுடன் நெருக்கமாக இருந்ததால் அதற்கு காரணமான அவரை கொலை செய்ததாகவும் அஜமல்கான் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஆஷா பானு அனுப்பிய பணத்தை அஜ்மல்கான் சேமித்து வைக்காமல் செலவு செய்ததால், அவர் பணம் அனுப்புவதை நிறுத்தியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த அஜ்மல்கான், கருணாநிதியை கொலை செய்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.