அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு சதுப்பு நிலங்களை ஒதுக்கிய அரசாணை ரத்து

அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Update: 2019-05-02 03:28 GMT
தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை அரசு ஒதுக்கீடு செய்தது. இது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்ய கோரி, சேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அது சதுப்பு நிலம் அல்ல என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதாகவும் வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு உத்தரவை எதிர்க்கும் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியதோடு, தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகளை ரத்து செய்தனர். சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஏற்கனவே கட்டிடங்கள் கட்டி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்  என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால், தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்