"சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மகாராஜன் என்பவர், தாமிரபரணி ஆற்று படுகையில் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சீவலபேரி தாமிரபரணி ஆற்று படுகையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் எந்த குவாரிக்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் மீண்டும் எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க தடை விதித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடுமணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும் தடைவிதித்து உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.