நிர்மலாதேவிக்கு தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது ? - உயர்நீதிமன்றம் கேள்வி

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2019-03-05 03:00 GMT
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், சிபிசிஐடி காவல்துறையினர் நிர்மலா தேவி வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை எனவும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டும் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றும் மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது? என கேள்வி எழுப்பினர். அவ்வாறு ஜாமின் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரது உயிருக்கு ஆபதில்லை என தெரிவித்தார். தொடர்ந்து, நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்