பழவேற்காட்டில் அகழ்வாய்வு நடத்த மக்கள் கோரிக்கை...
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் குறித்து அகழ்வாய்வு நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காட்டில், பல நூற்றாண்டு வரலாற்று பின்புலத்தை சொல்லும் வகையில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. சோழர்களால் கட்டப்பட்ட திருப்பாலீஸ்வரர் கோயில், விஜயநகர பேரரசு கட்டிய ஆதி நாராயணன் கோயில், போர்ச்சுகீசியர்கள் கட்டியதாக கூறப்படும் மகிமை மாதா ஆலயம் மற்றும் அரேபிய மொழி கல்வெட்டுகளை கொண்ட ஜாமியா ஜெம்மா மசூதி போன்றவை உள்ளன. மேலும், ஆங்கிலேயர்களுடனான போரில் கொல்லப்பட்ட டச்சுக் காரர்களின் 77 கல்லறைகளும் உள்ளன. விஜயநகர பேரரசு காலத்தில், கைப்பற்றிய தங்கம், வைரம் பொக்கிஷங்களை டச்சுக் காரர்கள் பூமிக்கடியில் புதைத்துள்ளதாகவும் செவி வழி செய்திகள் உலா வருகின்றன. எனவே, தொல்லியல் துறை மூலம் இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தி வரலாற்று பொக்கிஷங்களை வெளியில் கொண்டு வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.