பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-29 13:32 GMT
* புதுக்கோட்டை இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

* இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபடும் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க ஆர்வம் காட்ட கூடாது  என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உள்துறை செயலர் அறிவுறுத்த நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். 

* இந்த வழக்கில், தங்களையும் சேர்க்கக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், மணல் திருட்டில் பிடிபடும் வாகனங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. 

* பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. 

* அப்போது மணல் திருட்டில் பிடிபடும் வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும், மணல் திருட்டு தொடர்பான வழக்கின் ஆவணங்களை போலீசார் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

* மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்றும், வாகனத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுவராவிட்டால் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

* பறிமுதல் செய்யப்பட்ட மணல்  லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது என்றும், இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்