15-ஆம் தேதிக்குள் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிறமொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் - தமிழக அரசு

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

Update: 2018-09-04 10:40 GMT
தமிழக அரசு பள்ளிகளில், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் குமார், சதிஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாலான மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும், வழங்கப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து புத்தகங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 15-ஆம் தேதிக்குள் பிறமொழி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பு உறுதியளித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்