போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி
நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான 328 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நாதெள்ளா நிறுவனம் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் போலியான ஆவணங்களை காண்பித்து அதன் மூலம் வங்கிகளில் 380 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வங்கிகளின் கூட்டமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐயின் வழக்குப்பதிவை அடிப்படையாக கொண்டு தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாதெள்ளா நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடைகள், தாம்பரம், அண்ணாநகர், உத்தண்டியில் உள்ள சொகுசு பங்களாக்கள், விற்பனை வளாகங்கள், தி.நகரில் உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முடக்கியுள்ள சொத்துக்களின் மதிப்பு 328 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.