"கல்விக்கடன் வழங்க என்ன தகுதி நிர்ணயம்...?" சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

கல்விக் கடன் வழங்க என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-07-16 13:14 GMT
கல்விக் கடன் வழங்க என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் மாணவி தீபிகாவின் தந்தை வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததால், மாணவிக்கு கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுத்தது. வங்கியின் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து  மாணவி தீபிகா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அதில், தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லாத நிலையில், தவறான தகவல் அளித்ததால் 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடுமாறு தெரிவித்தார். இந்த மனு, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கல்வி கடன் வழங்க என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எந்த அடிப்படையில் கல்விக்கடனுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், வட்டி வசூலிப்பதால், கல்விக்கடன் வழங்குவது தொண்டு ஆகாது என கூறிய நீதிபதிகள், 

கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளுடன் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளை மேலாளருக்கு உத்தரவிட்டனர். கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை நிரூபிக்க தவறினால், நீதிமன்றம் தானாக முன் வந்து விதிமுறைகளை வகுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்