ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக, ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்று சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, 36 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், தபால் வாக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன.
வாக்கு எண்ணிக்கைக்காக நெல்லையில் இருந்து 24 அதிகாரிகள் அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் சாய் சரவணனின் மேற்பார்வையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்திற்கு திமுக வேட்பாளர் அப்பாவு, அவர் தரப்பு வழக்கறிஞர் மற்றும்
ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, அவர் தரப்பு வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கபட்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய தபால் ஓட்டு மறுவாக்கு எண்ணிக்கை பகல் ஒரு மணிக்கு முடிந்தது.
அதனை தொடர்ந்து, 36 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மாலை 6.30 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டன.
மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும், அது குறித்த விவர அறிக்கை நீதிபதி ஜெயசந்திரனிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அக்டோபர் 23-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.