பணமதிப்பிழப்பு நடவடிக்கை - மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த வணிகர் ராமன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வாயிலாக ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பரில் அறிவித்தது. பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது. இந்நிலையில், பின்னலாடை நூல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த ராமன், திருப்பூரில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார். ஆனால் வங்கியோ மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு ராமன் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தார். இதனிடையே, ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ராமன் அனுப்பிய மனுவிற்கு ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை 23 -ஆம் தேதி மறுத்து பதில் அனுப்பியது.இந்நிலையில் ராமன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றுக்கு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அமர்வு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.