ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி அபராதம்...
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்கள் அளவுக்கு அதிகமான நைட்ரஸ் ஆக்சைடை வெளியிடுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 40 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் சத்விந்தர் சிங் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்து விசாரணையை மேற்கொண்டது. இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இடைக்கால அபராதத் தொகையாக 100 கோடியை செலுத்த வேண்டும் என ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் அளித்துள்ள உத்தரவில், இந்தியாவில் புகை அளவு மோசடியில் ஈடுபட்டதற்காக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்த தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தவிட்டுள்ளார்.