சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம் - காதல் கணவர் ​ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரத்தில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-12-15 04:56 GMT
எஸ்.ஐ.யின் மகளாக பிறந்து சென்னை பெசண்ட் நகரில் வளர்ந்த சித்ரா, சின்னத்திரையில் காலூன்றி, பலரது நெஞ்சங்களில் குடிகொண்டவர். உச்சத்தில் இருந்த அவர், அண்மையில் ஹேம்நாத் என்பவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, தனியார் ஹோட்டலில் முகத்தில் நகக் கீறல் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து சித்ராவின் தந்தை போலீ​ஸில் புகாரளித்தார். அவரது உடலை கைப்பற்றி நடந்த, பிரேத பரிசோதனையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.   

இதையடுத்து, சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர நடத்தி வந்தனர். இருவரும் பதிவுத் திருமணம் செய்திருந்ததால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த சித்ராவின் தாய் விஜயா, தனது மகளின் இறப்புக்கு, தான் காரணமல்ல, எந்த தாயும் மகளின் இறப்புக்கு காரணமாக இருக்க மாட்டார் என உருக்கமாக தெரிவித்தார். 

இதனிடையே கடந்த 6 நாட்களாக சித்ராவின் கணவர் ​ஹேம்நாத்திடம் நடந்த விசாரணையில், அவர் முன்னுக்குபின் முரணாக பேசுவதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. இதையடுத்து ஹேம்நாத்தை நேற்றிரவு போலீசார் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்