'2.0' படம் தொடர்ந்து தள்ளிப்போக காரணம் என்ன?

ரஜினியின் காலா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டூ பாய்ண்ட் ஒ படம் எப்போது வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் படம் வெளியாகும் தேதியில் குழப்பம் நிலவுகிறது.. இதற்கு காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு

Update: 2018-06-17 07:19 GMT
கடந்த ஆண்டு பாகுபலி படம் வெளியான சமயத்திலேயே ரஜினியின் டூ பாய்ண்ட் ஓ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் திருப்திகரமாக இல்லை என கூறி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருந்த நிலையில், அதை மிஞ்சும் வகையில் 2.ஒ இருக்க வேண்டும் என ஷங்கர் விரும்பியுள்ளார்.. அதற்காக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
படத்தின் வெளியீடு தள்ளிப்போக இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான ஆடியோ வெளியானது.  படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.   படம் கடந்த  ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் படத்தின் முன்னோட்டம் திருப்திகரமாக இல்லை என கூறி ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

தற்போது ஆகஸ்டில் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.  ஆகஸ்ட் 10ம் தேதி கமலின் விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் வரவுள்ளதால், ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் என சொல்லப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளும் விரைவாக நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.   இம்மாத இறுதியில் டீசரும், அடுத்த மாதம் டிரைலரும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் முன்னோட்டத்தை பார்த்த பிறகு இன்னும் ஓரிரு நாட்களில் டீசர் வெளியிடும் தேதியும் அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. விரைவில் தங்களின் கொண்டாட்டத்திற்கு இயக்குனர் ஷங்கர் நாள் குறிப்பார் என ரஜினி ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்