கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
x
கடந்த 2016 ஆம் ஆண்டு கடைகள்,  நிறுவனங்களின் பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான  நிபந்தனைகள் குறித்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை, 365 நாட்களும் திறந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. 

இதனை மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை முதலில் அமல்படுத்திய மகாராஷ்டிர மாநிலம், 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களையும், 365 நாட்களும் திறப்பதற்கான அனுமதியை வழங்கியது. தமிழகத்தில், ஆண்டு முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறப்பதற்கான பரிந்துரையை, தொழிலாளர் நலத்துறை ஆணையர், அரசுக்கு வழங்கியிருந்தார். 

அதன்படி, பல்வேறு நிபந்தனைகளுடன் , அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும் அதன்படி, ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் கூடுதல் நேரம் தேவையெனில் ஒரு நாளைக்கு பத்தரை மணி நேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலோ பயன்படுத்தக்கூடாது.

பணி நேரத்தை தாண்டி கூடுதலாக அவர்கள் வேலை பார்த்தால் அதற்கான சம்பளத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் உரிய முறையில் செலுத்த வேண்டும் எனவும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது, ஒருவேளை அதற்கான அவசியம் இருந்தால்  அவர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும், ஷிப்ட் முறையில் வேலைக்கு வரும் பெண்களுக்கு உரிய வாகன வசதி செய்து தர வேண்டும் என்றும், பணியிடத்தில் ஊழியர்களுக்கான ஓய்வறை, கழிப்பறை, பாதுகாப்பு லாக்கர் வசதிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க அலுவலகங்களில் அதற்கான குழு அமைக்கப்பட்டிருப்பது அவசியம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்