வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
x
சென்னை குன்றத்தூர் அருகே தன் தாய் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேன்மொழி என்ற பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் தேன்மொழி மற்றும் அவரது தாய் என 2 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்தது அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்லாவரத்தில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்ற சம்பவத்தின் பின்னணியில் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணே கொள்ளை நடத்துவதற்கு பிளான் போட்டு கொடுத்ததும், அப்பாவி போல் அனைவரையும் நடித்து ஏமாற்றியதும் அம்பலமானது. கொள்ளையடிப்பதற்காக வீட்டில் இருந்த உயர் ரக நாய்களை கொன்று அதன்பிறகு கொள்ளையர்களை திட்டம் போட்டு வரவழைத்த வீட்டு வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். 

சமீபத்தில் சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவி என 2 பேரை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்ததன் பின்னணியிலும் அவர்கள் வீட்டில் வேலை பார்த்தவர்களே குற்றவாளிகளாக உள்ளனர்... 

அடுத்தடுத்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களால் வீட்டு வேலைக்கு ஆள் தேர்வு செய்வதில் அச்சம் என்ற நிலை தான் உருவாகி இருக்கிறது... கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் வீட்டில் வேலைகளை பார்க்க நம்பிக்கையான ஆட்களை தேடி அலைவோர் அதிகம். பாத்திரம் துலக்க, துணி துவைக்க, வீட்டை சுத்தம் செய்ய, வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள, குழந்தைகளை கவனிக்க என தேவைகளுக்கு ஏற்றார் போல ஆட்களை தேர்வு செய்கின்றனர். 

ஒரு மணி நேர வேலைக்கு இவ்வளவு பணம் என கேட்கும் பணியாட்கள், வேலையின் போது வீட்டை நோட்டம் விட்டு கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் போடுகின்றனர். வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? பீரோவின் சாவி வைக்கும் இடம் என எல்லாவற்றையும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கும் போது தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்க அடிப்படையாக இருக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி லட்சுமி நாதன்...

வேலையாட்களை ஏற்பாடு செய்து  கொடுக்க ஏஜென்சிகள் இருந்தாலும் கூட, தெரிந்தவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதும் இங்கே அவசியமானது. 

வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தாலும் கூட, வேலையாட்களின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வதும் இங்கே அவசியமானது. பணியாட்களிடம் தேவையான விஷயங்களை மட்டும் பேசுவது, அவர்களை ஒரு எல்லைக்குள் வைப்பதும் குற்றங்களை தடுக்க சிறந்த வழி... 

Next Story

மேலும் செய்திகள்