நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 -ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
x
நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து 18-ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 117 தொகுதிகளுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியுள்ளது. ஆயிரத்து 612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும், குஜராத்தில் அனைத்து 26 தொகுதிகளிலும் இன்று வாக்குபதிவு துவங்கியுள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா,  உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவும் இன்று துவங்கி  நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்குப்பதிவில் 18 கோடியே 56 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். வாக்குப்பதிவுக்காக 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் தேசிய அளவில் இன்றைய வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா, முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ்,  சசிதரூர், ஜெயபிரதா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளும் இன்று வாக்குப்பதிவை சந்தித்துள்ளன.    பதற்றம் நிலவும் பகுதியில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.  காலை 7 மணிக்கு துவங்கிய மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்